search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமலையார் வரலாறு"

    திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
    திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தை சக்தி தலமாகவும் புகழ்கிறார்கள்.

    தமிழ்க் கடவுள் முருகனின் அற்புதங்கள் நிகழ்ந்த ஆலயமாகவும் சொல்கிறார்கள். அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை ஆலயம் திகழ்கிறது.

    பொதுவாக முருகப்பெருமானுக்குதான் அறுபடை வீடுகள் இருப்பதை பார்த்துள்ளோம். விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருப்பது சமீபகாலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. விநாயகரின் முதல் படை வீடான திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நீங்கள் திரும்பிய திசையெல்லாம் விநாயகர் சிலைகளை பார்க்க முடியும். அந்த அளவுக்கு விநாயகர் திருவண்ணாமலை தலத்தில் நிறைந்துள்ளார்.

    திருவண்ணாமலை ஆலயம் மொத்தம் 5 பிரகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பிரகாரத்திலும் ஆங்காங்கே விநாயகர் வீற்றிருக்கிறார். 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தில் செல்வ கணபதி, கம்பத்து இளையனார் சந்நிதிக்குள் இருக்கும் ஸ்ரீகணபதி, சர்வசக்தி விநாயகர் சன்னதி, கோபுரத்து இளையனார் சன்னதிக்குள் இருக்கும் ஸ்ரீவிநாயகர், கல்யாணசுந்தரேசுவரர் சன்னதிக்குள் இருக்கும் விநாயகர், உச்சிபிள்ளையார், வன்னிமர விநாயகர், தனி மரத்தடியில் அமர்ந்து இருக்கும் கும்பாபிஷேக விநாயகர் என 8 விநாயகர்களை காணலாம்.

    4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அருகே ஸ்ரீகணபதி மற்றும் கிளிக்கோபுரம் அருகே யானைதிறைக்கொண்ட விநாயகர் என 2 விநாயகர்கள் உள்ளனர். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே பொட்டுகட்டும் விநாயகர், மகிழமரத்தடி விநாயகர், கல்யாண மண்டப விநாயகர், பிடாரிகோவில் விநாயகர், கொடிமரம் அருகே சம்பந்த விநாயகர், கொடிமர மண்டபத்தில் ஸ்ரீஉண்டி விநாயகர் என 6 விநாயகர்கள் உள்ளனர்.

    2-ம் பிரகாரத்தில் நாயன்மார்கள் வீற்றிருக்கும் வரிசையில் கணபதி, சேத்திரகணபதி, விநாயகர், விநாயகர் என 4 விநாயகர்கள் இருக்கிறார்கள். கருவறையை சுற்றி முதல் பிரகாரத்தில் கோஷ்டத்தில் ஒரு விநாயகர் இருக்கிறார். உண்ணாமலை அம்மன் சன்னதி வாசலில் விஜயராகவ விநாயகர் உள்ளார். அடுத்து மண்டபத்தில் விநாயகர், விநாயகர், ஸ்ரீகணபதி, விநாயகர், விநாயகர், விநாயகர், விநாயகர் ஆகிய 7 பேர் உள்ளனர். அம்மன் கருவறை கோஷ்டத்தில் தனங்களுடன் ஸ்ரீகணேவி காணப்படுகிறார்.

    இப்படி திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 30 விநாயகர்கள் இருக்கிறார்கள். மிகவும் சிறப்பு பெற்ற செல்வகணபதி, யானை திறைக்கொண்ட விநாயகர், சேத்திர விநாயகர், சம்பந்த விநாயகர் போன்ற விநாயகர்களின் சிறப்புகளை மட்டும் பார்க்கலாம்.

    திருவண்ணாமலை கோவிலில் 30 விநாயகர்கள் இருந்தாலும் விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படைக்குரிய விநாயகராக கருதப்படுபவர் ராஜகோபுரத்தில் இருக்கும் செல்வகணபதி ஆவார். பொதுவாக ஆலயங்களில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் எந்த சன்னதியும் இருப்பதில்லை. ஆனால் திருவண்ணாமலை ராஜகோபுர நுழைவு வாயிலில் செல்வகணபதி வீற்றிருக்கிறார். இது திருவண்ணாமலை ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று என ரமேஷ் சிவாச்சாரியார் தெரிவித்தார். ராஜகோபுரத்துக்குள் நுழைந்ததும் போலீசார் பக்தர்களை சோதனை செய்யும் பகுதி உள்ளது. அந்த பகுதியை கடந்ததும் இடது பக்கத்தில் பார்த்தால் செல்வகணபதியை காணலாம். இவர்தான் முதல் படைக்குரிய விநாயகர் ஆவார்.

    இந்த விநாயகர் அவ்வையாரால் பாடல்பெற்ற சிறப்புக்குரியவர். இந்த விநாயகர் மீது அவ்வையார் பாடிய பாடல்.....

    அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
    தொல்லைபோம்; போகாத் துயரம்போம் நல்ல
    குணமதிக மாம்அருணைக் கோபுரத்துக்குள் மேவும்
    கணபதியைக் கைதொழுதக் கால்.

    இந்த பாடல் விவேக சிந்தாமணியில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் மூலம் அவ்வையார் ஒரு உண்மையை நமக்கு உணர்த்தியுள்ளார். நாம் முக்தி பாதைக்கு செல்ல வேண்டுமானால் வினைகளை அகற்ற வேண்டும். அந்த வினைகளை தீர்க்கும் முழு முதற்கடவுளாக செல்வகணபதி திகழ்கிறார். இவரை வழிபட்டால் எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை-தீமை போன்றவற்றால் உருவாகும் வினைகளும் நீங்கும்.

    பிறவி எடுக்கக் காரணமாக உள்ள அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் விலகும். சகல வினைகளும் தீர்ந்து போகும். ஞானம் கைமேல் கனியாக வரும் என்று அவ்வையார் கூறியுள்ளார். அதனால்தான் இந்த விநாயகரை அறுபடை வீடுகளின் முதல் படைவீடு விநாயகராக நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    இவரை வழிபட்டு தான் ஞானிகள், மகான்கள், சித்தர்கள் ஆத்ம ஞானம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலைக்கு முக்தியை தேடி வருபவர்களுக்கு அதற்கான பாதையை இந்த விநாயகர் தான் அமைத்து கொடுக்கிறார் என்பது ஐதீகம். எனவே இந்த செல்வ கணபதி மிக மிக முக்கியமானவர். ஆனால் திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் இவரது சிறப்பை அறியாமல் உணராமல் உள்ளது வேதனையாகும்.

    நமது முன்னோர்கள் இந்த கணபதியை சிறப்பு செய்து இருந்தாலும் திருவண்ணாமலை ஆலய நிர்வாகம் இந்த விநாயகருக்கு ஏனோ அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திருவண்ணாமலை தலத்தின் அதிகாரப்பூர்வ பிரதானமான விநாயகர் என்ற அந்தஸ்து சம்பந்த விநாயகருக்கே வழங்கப்பட்டுள்ளது. சம்பந்த விநாயகர், கொடி மரம் அருகே தனி சன்னதியில் உள்ளார். இந்த விநாயகருக்கு செந்தூர விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆஞ்சநேயருக்குதான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் இத்தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.

    மூலிகை பொருட்களால் உருவாக்கப்பட்டதால் இந்த விநாயகர் சிவந்த நிறத்தில் இருப்பதாக ஒரு கருத்து உண்டு. 1262-ம் ஆண்டு வீரவல்லாள மன்னன் காலத்து கல்வெட்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சம்பந்தாண்டார் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர் இந்த விநாயகர் சன்னதியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் பெயரால் சம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

    இதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அவனிடம் பணியாள் போல கட்டுப்பட்டுக் கிடந்தாள். இதனால் அவன் செருக்குடன், யாரையும் மதிக்காமல் இருந்தான். பலரையும் கொடுமை செய்தான்.

    இதனால் விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். இதை பக்தர்களுக்கு உணர்த்தவே திருவண்ணாமலை தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசப்படுகிறது.

    சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். அதுபோல திருவண்ணாமலை தலத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் அனைத்துக்கும் இந்த சம்பந்த விநாயகரை பூஜித்த பிறகுதான் விழா தொடங்கும்.

    விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இரவு 7.30 மணிக்கு விநாயகர் புறப்பாடு இந்த சன்னதியில் இருந்துதான் புறப்படும். இந்த சன்னதி அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த சன்னதி முன்பு நின்றுதான் அந்த கால மன்னர்கள் முடிசூட்டிக் கொண்டதாக வரலாறு உள்ளது.

    திருவண்ணாமலை யில் அண்ணாமலையார் முன்பு நின்று எந்த அரசரும் பதவி ஏற்றது இல்லை. அதுபோல இந்த தலத்தில் பூரண கும்ப மரியாதையோ, பரிவட்டம் கட்டுவதோ நல்லதல்ல என்ற கருத்து உள்ளது. காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் இது தொடர்பான பயம் இருப்பதால் சம்பந்த விநாயகர் முன்பு வந்து அனைத்தையும் செய்து கொள்வார்கள்.

    அந்த காலத்தில் பிரச்சினைகள் ஏதாவது வந்தால் சம்பந்த விநாயகர் முன்புதான் சத்தியம் வாங்குவார்களாம். இதனால்தான் இன்றளவும் சம்பந்த விநாயகர் தனித்துவத்துடன் திகழ்கிறார். இவரை போலவே யானைதிறைக் கொண்ட விநாயகருக்கு தனிச்சிறப்பு உள்ளது. ஒருசமயம் ஆந்திராவைச் சேர்ந்த அரசர் ஒருவர் திருவண்ணாமலையை முற்றுகையிட்டு போரிட்டு கைப்பற்றினார். அன்று இரவு அவர் திருவண்ணாமலையில் தனது படை வீரர்களுடன் தங்கியிருந்தார்.

    அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. யானை ஒன்று தன்னையும், தனது படைவீரர்களையும் அடித்து விரட்டுவது போல கனவு கண்டார். அதிர்ச்சியுடன் விழித்த அவர் இதுபற்றி விசாரித்தார். அப்போது திருவண்ணாமலை தலத்தில் உள்ள தலவிநாயகர்தான் அவர் கனவில் வந்தது எனத் தெரிய வந்தது. உடனே அந்த அரசர் தனது யானை படை அனைத்தையும் அந்த விநாயகருக்கு காணிக்கை செலுத்தி மன்னிப்பு கேட்டு சென்றார். இதனால் அந்த தலவிநாயகருக்கு யானைதிறைக் கொண்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. கிளிக்கோபுரம் அருகே சிறுகுகை போன்ற சன்னதியில் நின்ற கோலத்தில் இந்த விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.

    சிவகங்கை தீர்த்தம் அருகில் உள்ள சர்வசக்தி விநாயகருக்கும் தனி சிறப்பு உள்ளது. இவரை நகரத்தார்கள் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஆலயத்தின் 2-ம் பிரகாரத்தில் மேற்கு திசையில் தென்மேற்கு மூலையில் உள்ள சேத்திர விநாயகரும் குறிப்பிடத்தக்கவர். கண்டராதித்த சோழ மன்னனின் மனைவி செம்பியன் மாதேவியால் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டார்.

    ஒரு தடவை கும்பாபிஷேகத்தின்போது அண்ணாமலையாருக்கு அடுத்தப்படியாக இந்த விநாயகருக்குதான் முதலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விநாயகர் பலகை கல்லில் செய்யப்பட்டவர் ஆவார். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே உள்ள பொட்டுக்கட்டும் விநாயகரும் வரலாற்று சிறப்புடையவர். அந்த காலத்தில் இவர் முன்னிலையில் தேவதாசிகள் தங்களை கோவில் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொள்வார்கள். இந்த அர்ப்பணிப்புக்கு பொட்டுக்கட்டுதல் என்று பெயர். எனவே இந்த விநாயகருக்கு பொட்டுக்கட்டும் விநாயகர் என்ற பெயர் நிலைத்து விட்டது.

    திருவண்ணாமலை ஆலயத்துக்குள் மட்டுமின்றி ஊருக்குள்ளேயும், மலை சுற்றும் பாதையிலும் ஏராளமான விநாயகர்கள் உள்ளனர். ஊருக்குள் தேரடி வீதிக்கும் கொசமட தெருவுக்கும் இடையே ரேடியோகிரவுண்டு பகுதியில் முத்தம்மை விநாயகர் உள்ளார். அருணகிரிநாதர் தாயார் முத்தம்மை இந்த விநாயகரை வணங்கியதால் இதற்கு முத்தம்மை விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

    அதுபோல கிரிவல பாதையில் தலைதிருக தனம் கொடுக்கும் விநாயகர், இடுக்கு பிள்ளையார் என்று நிறைய விநாயகர்கள் இருக்கிறார்கள். இப்படி திருவண்ணாமலை தலத்தின் பிரிக்க முடியாத அம்சமாக விநாயகர் திகழ்கிறார். அவரைப் போன்றே திருவண்ணாமலை முழுக்க லிங்கங்களும் நிறைந்துள்ளன. 
    திருவண்ணாமலை தலத்திற்கு செல்பவர்கள் அக்னி லிங்கமாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற முடியும்.
    திருவண்ணாமலை கோவிலில் திரும்பிய திசை எல்லாம் லிங்கங்களை பார்க்கலாம். இந்த ஆலயத்தில் மொத்தம் 56 லிங்கங்கள் உள்ளன. இதில் 11 லிங்கங்கள் தனி சன்னதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது.

    அந்த வரலாற்றை தெரிந்து கொள்வது என்பது மிக கடினமானது. முக்கிய லிங்கங்கள் பற்றி மட்டும் இப்போதும் செவி வழி செய்தியாக தகவல்கள் உள்ளன. இந்த லிங்கங்கள் ஆலயத்தின் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என்பதை தெரிந்து கொண்டால் வழிபாடு செய்வதற்கு மிக எளிதாக இருக்கும்.  ராஜகோபுரத்தை கடந்ததும் வரும் 5-ம் பிரகாரத்தில் பாதாள லிங்கேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற 2 லிங்கங்கள் இருப்பதை பார்க்கலாம். அடுத்து 4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் எதிரே பிரம்ம லிங்கம், ஸ்ரீநளேஸ்வரர், வித்யாதேஸ்வரர் ஆகிய 3 லிங்கங்கள் உள்ளன.

    3-ம் பிரகாரத்தில் மகிழ மரத்தடியில் ஜலகண்டேஸ்வரர், கல்யாண மண்டபத்தில் பீமேஸ்வரர், அருணகிரி யோகீஸ்வரர், ஸ்ரீகாளத்தீஸ்வரர், சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தனித்தனி சன்னதிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிரகாரத்தில் அமைந்துள்ள லிங்கங்கள் பஞ்ச பூதங்களை பிரதிபலிப்பதை காணலாம். இதன் மூலம் திருவண்ணாமலை தலத்தில் பஞ்ச பூதங்களும் அடங்கி இருப்பதை நமது முன்னோர்கள் உணர்த்தி உள்ளனர்.

    2-ம் பிரகாரத்தில் அடுத்தடுத்து லிங்கங்கள் அணிவகுத்து இருக்கின்றன. இந்திர லிங்கம், சனகேஸ்வரர், சனந்தனேசுவரர், சனாதனேஸ்வரர், சனதீகுமாரேஸ்வரர், கவுசிகேசுவரர், குத்ஸரிஷி ஈஸ்வரர், வால்மீகிசுவரர், அக்னி லிங்கம், விக்னேசுவரர், விஸ்வநாத ஈஸ்வரர், ஸ்ரீநாரதேசுவரர், ஸ்ரீகாசி லிங்கம், ஸ்ரீகாசி லிங்கம், வைசம் பாயனேசுவரர், ஸ்ரீவாமரீஷிசுவரர், எம லிங்கம், காசி லிங்கம், காசிலிங்கம், காசி லிங்கம், காசி லிங்கம், ஸ்ரீதும்புரேஸ்வரர், ஸ்ரீநிருதலிங்கம், ஸ்ரீ வருணலிங்கம், வியாசலிங்கம், ஸ்ரீவிக்ர பாண்டீ சுவரர், ஸ்ரீவணிஷ் டலிங்கம், ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீவாயுலிங்கம், ஸ்ரீகுபேர லிங்கம், விசுவாமித்ஸ்வரர், ஸ்ரீபதஞ்சலீசுவரர், ஸ்ரீவியாக்கிரபாதேசுவரர், 108 லிங்கம், ஸ்ரீஅகஸ்தீசுவரர், ஸ்ரீஜீரஹரேசுவரர், ஈசானலிங்கம் என 37 லிங்கங்கள் இந்த பிரகாரத்தில் உள்ளன.

    இந்த 37 லிங்கங்களும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டவை. எனவே இந்த லிங்கங்களை மிக பொறுமையாக வழிபாடு செய்தால் பல உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். மிக உன்னிப்பாக கவனித்தால் கிரிவலப்பாதையில் நாம் வழிபடும் அஷ்டலிங்கங்களும் இங்கு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒரே கல்லில் 1008 லிங்கம் இருப்பதை பார்க்கலாம். இந்த லிங்கங்களில் பெரும்பாலானவை ரிஷிகளால் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து கருவறையில் இருக்கும் மூலவரான அண்ணா மலையார் லிங்கத்தை பார்க்கலாம். 5-ம் பிரகாரத்தில் இருந்து ஒவ்வொரு லிங்கமாக நாம் கணக்கிட்டு வந்தால் மிகச்சரியாக 50-வது லிங்கமாக கருவறை லிங்கம் திகழ்கிறது. இந்த லிங்கத்திற்கு அக்னி லிங்கம் என்று பெயர். சிவப்பெருமான் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வடிவமாக திகழ்கிறார். அதை உணர்த்தவே காஞ்சீபுரத்தில் மண்லிங்கம், திருவானைகாவலில் நீர் லிங்கம், ஸ்ரீகாளகஸ்தீயில் வாயு லிங்கம், சிதம்பரத்தில் ஆகாய லிங்கம் இருக்கின்றன. அதேபோன்று திருவண்ணாமலையில் அக்னி லிங்கம் திகழ்கிறது.

    முன் ஒரு காலத்தில் சிவபெருமானை நோக்கி பார்வதி தேவி கடும் தவம் இருந்தாள். அவளுக்கு காட்சி கொடுப்பதற்காக சிவபெருமான் அக்னி வடிவம் எடுத்து வந்தார். பார்வதியும் பரமசிவனும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் ஆக மாறி அக்னி மண்டலத்தின் நடுவில் நடனம் புரிந்தனர். பிறகு சிவலிங்கமாக மாறினார்கள். அந்த லிங்கம்தான் அக்னி லிங்கமாக போற்றப்படுகிறது.

    அக்னி லிங்கம் மிகுந்த ஆற்றல் உடையது. நாம் கேட்கும் அனைத்து வரங்களையும் தரும் சிறப்புடையது. திருவண்ணாமலை தலத்திற்கு செல்பவர்கள் அக்னி லிங்கமாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற முடியும். அக்னி லிங்கத்தை வழிபடும்போது நமது மனம் இலவம்பஞ்சு போல லேசாகி விடும். நம் மன பாரத்தை எல்லாம் அக்னி லிங்கமாக இருக்கும் அண்ணாமலையார் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தோன்றும். சுருக்கமாக சொல்வது என்றால் நம் மனது நிர்விகல்பம் ஆகி விடும். அக்னி லிங்கத்திடம் நம் மனதை ஆத்மார்த்தமாக செலுத்தினால் மட்டுமே இந்த நிலையை நாம் பெற முடியும்.

    இத்தகைய சிறப்புடைய அக்னி லிங்கத்தை வழிபட்ட பிறகு வெளியில் வந்து முதல் பிரகாரத்தை சுற்றி வரலாம். அங்கு லிங்கோத்பவர் உள்ளார். அடுத்து உண்ணாமலையம்மன் சன்னதியிலும் லிங் கங்கள் உள்ளன. அங்குள்ள அஷ்ட லட்சுமி மண்டபத்தில் சோழலிங்கம், சேரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் நிறுவி வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த லிங்கங்கள் தவிர அடிமுடி அறியாதவர், லிங்கம், ஸ்ரீசோமேசுவரர் உள்ளனர்.



    இவ்வளவு லிங்கங்கள் இருந்தாலும் தனி சன்னதிகளில் உள்ள லிங்கங்களுக்கு வெவ்வேறு சிறப்புகள் உள்ளன. 5-ம் பிரகாரத்தில் உள்ள பாதாளலிங்கம் ரமணர் காலத்தில் புகழ்பெற்றது. இந்த பாதாள லிங்கம் ஆயிரம்கால் மண்டபத்தில் ஒரு பகுதியில் பாதாளத்தில் அமைந்துள்ளது. ரமணர் சிறுவயதில் திருவண்ணாமலைக்கு வந்த போது குகை போன்று இருந்த இந்த பாதாளத்திற்குள் சென்று தவம் இருந்தார்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ரமணரை கண்டுபிடித்து வெளியில் அழைத்து வந்தனர். அதன் பிறகு இந்த பாதாள லிங்கத்திற்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த லிங்கம் இருக்கும் சன்னதியில் அமர்ந்து தியானம் செய்தால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இந்த பிரகாரத்திலேயே கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது. அங்கு கிழக்கு திசையை நோக்கி ஈஸ்வரர் அமர்ந்து உள்ளார். அவரை சாட்சியாக வைத்து அந்த சன்னதியில் திருமணம் நடத்தப்படுகிறது. சிவராத்திரி தினத்தன்று இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

    நான்காம் பிரகாரத்தில் நளேஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. சேதி நாட்டு இளவரசி தமயந்தி நிடத நாட்டு மன்னன் நளன் என்பவனை திருமணம் செய்ய முடிவு செய்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனி பகவானை தூண்டி விட்டு நளனை துன்புறுத்த செய்தனர். உடனே நளன் சிவபெருமானை வேண்டி வணங்கி தனது துன்பத்தில் இருந்து விடுபட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நளன் இத்தலத்துக்கு வந்து இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் இந்த லிங்கம் நளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நளேஸ்வரரை வழிபட்டால் களத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    இந்த சன்னதி அருகிலேயே வித்யாதேஸ்வரர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் கல்வியில் சிறப்புகளை பெறலாம் என்பது ஐதீகமாகும். அடுத்து அதே வரிசையில் பிரம்மலிங்கம் தனி சன்னதியில் இருப்பதை காணலாம். பிரம்மா இத்தலத்தில் அண்ணாமலையாரை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரம்மா எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டு இருப்பார்.

    இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கத்திலும் நான்கு முகங்கள் உள்ளன. அக்னி, வாயு, மண், தண்ணீர் ஆகியவற்றை குறிப்பதால் இந்த நான்கு முக லிங்கத்தை சதுர்முக லிங்கம் என்று சொல்கிறார்கள். உச்சியில் ஐந்தாவது முகமும் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த முகத்துக்கு ஆகாசம் என்று பெயர். இதனால் இந்த லிங்கம் பஞ்சமுக லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

    அதே பிரகாரத்தில் அடிமுடி காணா அண்ணாமலையார் சன்னதி உள்ளது. அண்ணாமலையார் பாதம் அருகே அமைந்துள்ள இந்த சன்னதியில் சிவபெருமானும் பார்வதியும் சேர்ந்து காட்சி அளிக்கிறார்கள். திருவண்ணாமலை தலத்தில் இந்த சன்னதி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழம் மரம் அருகே கல்யாண மண்டபத்திற்குள் பீமேஸ்வரர் சன்னதி உள்ளது.

    பஞ்ச பாண்டவர்கள் மகாபாரதபோரில் வெற்றி பெறுவதற்காக ஒன்றாகவும் தனித்தனியாகவும் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபட்டனர். அந்த வகையில் பீமன் திருவண்ணாமலை தலத்துக்கு வந்து அண்ணாமலையாரை வழிபட்டு பலன் பெற்றார். அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதி அமைந்துள்ளது. சிலர் இந்த சன்னதி அமைந்துள்ள இடத்தில் தான் அண்ணாமலையாரை பீமன் நேரில் கண்டு தரிசித்ததாக சொல்கிறார்கள்.

    இந்த சன்னதியை கடந்துசென்றால் மேற்கு பகுதியில் அருணகிரி யோகீஸ்வரர் மண்டபத்தை காணலாம். நான்கு துண்களுடன் அமைந்துள்ள இந்த சன்னதியில் அருணகிரி நாதர் சிலை அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் அண்ணாமலையார் அங்கு யோகியாக வீற்றிருப்பதாக சான்றோர்கள் கணித்துள்ளனர். இதனால் இந்த மண்டபம் அருணகிரி யோகீஸ்வரர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

    சித்தர்கள் இந்த இடத்தில் தியானம் செய்து பலன் பெற்றுள்ளனர். எனவே இந்த மண்டபம் பகுதியில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.  இதே மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அகத்தீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சிதம் பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் ஆகிய சன்னதி கள் சிவபெருமான் பஞ்சபூதங்களாக இத்தலத்தில் இருப்பதை பிரதிபலிக்கின்றன.

    இரண்டாம் பிரகாரத்தில் 37 லிங்கங்கள் அணிவகுக்கின்றன. அந்த லிங்கங்களின் பெயரிலேயே அவற்றின் வரலாறு உள்ளது. நேரம் இருப்பவர்கள் இந்த லிங்கங்களின் வரலாறை தெரிந்து கொண்டு வழிபட்டால் அந்த வழிபாடு முழுமையானதாக இருக்கும்.  திருவண்ணாமலை தலத்தில் மற்ற இறை சன்னதிகள் போல நந்திக்கும் பல்வேறு சன்னதிகள் உள்ளன. அந்த சன்னதிகளிலும் ரகசியங்கள் மறைந்துள்ளன. 
    திருப்புகழைப் பாட, பாட வாய் மணக்கும் என்பார்கள். அந்த திருப்புகழ் பிறந்த இடம் திருவண்ணாமலை. திருப்புகழ் பாடல்களைப் பாடியவர் அருணகிரி.
    திருப்புகழைப் பாட, பாட வாய் மணக்கும் என்பார்கள். அந்த திருப்புகழ் பிறந்த இடம் திருவண்ணாமலை. திருப்புகழ் பாடல்களைப் பாடியவர் அருணகிரி.
    இவர் சுமார் 167 ஆலயங்களுக்கு சென்று முருகன் மீது பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருப்புகழ் ஆக உள்ளது. அருணகிரிநாதர் சுமார் 16 ஆயிரம் பாடல்களை முருகன் மீது பாடினார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது 1328 பாடல்கள் மட்டுமே உள்ளன.

    திருப்புகழ் பாடல்களில் சந்த வகைகள் அதிகம் இருப்பதாக சொல்வார்கள். நமக்கு கிடைத்துள்ள 1307 திருப்புகழ் பாடல்களில் 1008 சந்த வகைகள் இருப்பதாக ஆராய்ந்து கண்டு பிடித்துள்ளனர். அவை கலைப் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.

    இந்த பொக்கிஷத்தை நமக்கு தந்த அருணகிரிநாதர் பெண்ணே கதி என்று கிடந்தவர். அவரை ஆட்கொண்ட முருகப்பெருமான், அவர் மூலம் நமக்கு திருப்புகழை தரச் செய்தார். இதன் மூலம் முக்தித் தலமான திருவண்ணாமலையில் சிவபெருமான் மட்டுமின்றி முருகனும் தனி திருவிளையாடல் நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

    திருவண்ணாமலையில் முத்தம்மை என்றொரு பெண் கோவிலில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாள். ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த அவளுக்கு சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்தது. அதன் பயனாக முத்தம்மைக்கு ஆண் குழந்தை பெற்றெடுக்கும் பாக்கியம் கிடைத்தது. அருணாசலேஸ்வரர் அருளால் பிறந்த குழந்தை என்பதால் அந்த குழந்தை “அருணகிரி” என்று பெயரிட்டாள். சிறு வயதில் இருந்தே அருணகிரி பெற்றோர் சொல் கேட்காமல் காம களியாட்டங்களில் ஈடுபட்டார். இதனால் மனம் வெறுத்த தந்தை வீட்டை விட்டு வெளியேறினார்.

    இதனால் முத்தம்மை உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒருநாள் அவர் தம் மகளை கூப்பிட்டு, “தம்பியை பார்த்து கொள்” என்று கூறி விட்டு உயிரை விட்டாள். அதன் பிறகு தம்பிக்கு அன்னை போல இருந்து அவரது சகோதரி கவனித்து வந்தார். தட்டிக்கேட்க ஆள் இல்லாததால் அருணகிரியின் காம களியாட் டங்கள் அதிகரித்தது. இதனால் சொத்துக்கள் அழிந்தன. வறுமை சூழ்ந்தது. அதோடு அருணகிரியை தோல் நோயும் தாக்கியது.

    பணம் இருக்கும் வரை பாசத்தோடு இருப்பது போல நடித்த தேவதாசிகள், அருணகிரியாருக்கு நோய் இருப்பதை அறிந்ததும் வெளியில் தள்ளி கதவைப் பூட்டினார்கள். அப்போதுதான் அருண கிரிநாதருக்கு புத்தி வந்தது. தனது வாழ்வை சற்று யோசித்துப் பார்த்தார். தவறான பழக்கத்தால் தன் சகோதரியையும் ஏழ்மை நிலைக்கு தள்ளி விட்டதை நினைத்து வருந்தினார். குற்ற உணர்ச்சி பொங்க, என்ன செய்வது என்று தலை சாய்த்து யோசித்தார். அவர் கண்ணில் திருவண்ணாமலை ஆலய வல்லாள மகாராஜா கோபுரம் பட்டது.

    உடனே அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்தார். யாருக்கும் பயன்படாத தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது திட்டமாக இருந்தது. ஆனால் முருகப்பெருமானின் சித்தமோ வேறு விதமாக இருந்தது. கோபுரத்தில் இருந்து விழுந்த அருணகிரிநாதரை முருகப்பெருமான் தனது இரு கைகளையும் ஏந்தி பிடித்துக் கொண்டார். அருணகிரி நாதர் ஆச்சரியத்தோடுப் பார்க்க அவர் காதில் முருகப்பெருமான், “சும்மா இரு, சொல் அற” என்று சொல்லி, ஜெப மாலை ஒன்றையும் கொடுத்து விட்டு மறைந்தார்.

    அக்கணமே அருணகிரி நாதரின் தோல் நோயும் மறைந்தது. முருகன் அருள் பெற்ற அவர் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் தவத்தில் மூழ்கினார். சுமார் 12 ஆண்டுகள் அவர் தவத்தில் இருந்தார். ஒருநாள் முருகப் பெருமான் அவர் முன் தோன்றி, “என் திருப்புழைப் பாடு” என்றார். அதற்கு அருணகிரி, “முருகா... எனக்கு வேதமும் தெரியாது. சந்தமும் தெரியாது. நான் எப்படி உன்னைப் புகழ்ந்து பாட முடியும்” என்றார். உடனே முருகப்பெருமான் அவர் நாவில், “முத்தைத் தரு பத்தி திருநகை” எனும் திருப்புகழின் முதல் அடியை எழுதி எடுத்துக் கொடுத்து மறைந்தார்.

    மறுநிமிடத்தில் இருந்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை பாடி குவித்தார். முதலில் அவர் பாடிய திருப்புகழ் பாடல்....



    முத்தைத் தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்தி சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரு
    முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப்

    பத்துத்தலை தத்தக் கணை தொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியி விரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கட்விய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே

    தித்தித்தெய வொத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரபவு நிக்குத் த்ரிகடக எனவோதக்
    கொத்துப்பறை கொட்டக்களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
    கொட்புற்றெழு நட்புற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே

    --இந்த முதல் திருப்புகழ் பாடலைப் பாடி விட்டு அருணகிரிநாதர் மீண்டும் தவத்தில் ஆழ்ந்து விட்டார். சில ஆண்டுகள் கழித்து முருகப்பெருமான் அவர் முன் மீண்டும் தோன்றி, “என் ஆலயங்களுக்கு சென்று திருப்புகழைத் தொடர்ந்து பாடு” என்று உத்தரவிட்டார்.அதை ஏற்று அருணகிரிநாதர் வயலூருக்கு சென்றார்.
    பிறகு தமிழகம் முழுவதும் சென்று திருப்புகழ் பாடினார். வடநாடு மற்றும் ஈழத்துக்கும் சென்று முருகனை புகழ்ந்து திருப்புகழ் பாடினார். அவருக்கு வயலூர், சிதம்பரம், விராலிமலை, பிரான்மலை, திருச்செந்தூர், திருத்தணி ஆகிய 6 தலங்களில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.

    இந்த சம்பவங்களால் அருணகிரிநாதரின் புகழ் நாடு முழுவதும் பரவியது. இதையடத்து சில புலவர்கள் அழைத்ததின் பேரில் ஸ்ரீவில்லிப்புத்தூராரை கந்தகர் அந்தாதி பாடி தோற்கடித்தார். பழனி தலத்தில் இருந்தபோது இறைவனிடம் வேண்டி தம் சகோதரிக்கு முக்தி பெற்றுக் கொடுத்தார். அது போல வட மாநில யாத்திரை மேற்கொண்டிருந்தபோது சாதுக்களுடன் இருந்த தந்தையை கண்டுபிடித்து அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்தார்.

    மீண்டும் திருவண்ணாமலை திரும்பிய அருணகிரிநாதர் மீது சம்பந்தாண்டான் என்ற காளி உபாசகன் பொறாமை கொண்டான். அவன் பிரபுடதேவன் மன்னனிடம் சென்று நான் பாட்டுப்பாடி காளியை வரவழைக்கிறேன். அருணகிரி நாதரால் முருகனை வரவழைக்க முடியுமா? என்று சாவல் விட்டார். மன்னர் முன்னிலையில் போட்டி நடந்தது. முதலில் சம்பந்தாண்டான் பாடினான். காளி வரவில்லை. அடுத்து அருணகிரி நாதர் பாடினார். பதினாறுகால் மண்டபத்தின் ஈசான்யத் தூணில் இருந்து முருகப்பெருமான் வெளியில் வந்து தோன்றி காட்சியளித்தார்.

    தோல்வி அடைந்த சம்பந்தாண்டான் பழி வாங்கத் துடித்தான். சில ஆண்டுகளில் மன்னன் பிரபுடதேவனின் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சம்பந்தாண்டான், தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் மன்னனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்றான். அதோடு அந்த மலரை கொண்டு வரும் ஆற்றல் அருணகிரி நாதருக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினான். உடனே அருணகிரிநாதரை அழைத்த மன்னன், தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

    அதை ஏற்றுக் கொண்ட அருணகிரிநாதர் பேக் கோபுரத்துக்கு சென்றார். அங்கு தவத்தில் ஆழ்ந்தார். பிறகு கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் தனது உயிரை உடம்பில் இருந்து பிரித்தார். அங்கு இறந்து கிடந்த கிளி உடம்பில் உயிரை செலுத்தி, தேவலோகத்துக்கு பறந்து சென்றார். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தாண்டான், சடலமாக கிடந்த அருணகிரிநாதரின் உடலை எடுத்து எரித்து விட்டான்.

    பாரிஜாத மலருடன் திரும்பிய அருணகிரிநாதர் தம் உடலை காணாது வருந்தினார். கிளி உருவத்தில் சென்று மன்னனிடம் பாரிஜாத மலரை கொடுத்தார். அப்போது அவர், “மன்னா நான் மன்னிடம் சுகபதம் (முக்தி) வேண்டினேன். எனக்கு சுக (கிளி) உருவம் கொடுத்து விட்டார்” என்றார்.

    அதன்பிறகு கிளி உருவிலேயே கோபுரத்தில் அமர்ந்து கந்தர் அந்தாதி, திருவகுப்பு மற்றும் கந்தர் அனுபூதியை அருணகிரிநாதர் பாடினார். ஒரு ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் முருகனின் திருவடியை அருணகிரிநாதர் அடைந்தார். அவரது ஆன்மாவை தாங்கியிருந்த கிளி உண்ணாமுலை அம்மன் கையில் போய் அமர்ந்து விட்டதாக சொல்கிறார்கள்.

    சிலர் அந்த கிளி, திருத்தணி வந்து முருகன் கையில் அமர்ந்ததாக சொல்கிறார்கள். இத்தகைய சிறப்புடைய அருணகிரிநாதர் வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், கந்தர் அயங்காரம், திருவெழுக் கூற்றிருக்கை ஆகியவையும் பாடியுள்ளார். திருவண்ணாமலை தலத்தில் அருணகிரிநாதர் தாங்கி பிடிக்கப்பட்ட இடத்தில் கோபுரத்து இளையனார் என்ற பெயரிலும் கம்பத்தில் காட்சியளித்த இடத்தில் கம்பத்து இளையனார் என்றும் முருகனுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன.

    திருவண்ணாமலை தலத்தில் வரும் புதன்கிழமை (ஆகஸ்டு 15-ந்தேதி) அருணகிரி நாதர் உற்சவம் நடைபெற உள்ளது. அன்று திருப்புகழ் படித்தால் பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும்.
    திருவண்ணாமலையில் மட்டும் தீ மிதி விழா நடைபெறுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு வருமாறு:-
    அண்ணாமலையார் அக்னியில் இருந்து தோன்றியவர். தீ பிழம்பாக இருந்து பிறகு சிவனடியார்களின் நலனுக்காக மலையாக மாறியவர். இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு திருவண்ணாமலையில் எத்தனையோ திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூரம் உற்சவமும் ஒன்று.

    மற்ற சிவாலயங்களில், சக்தி தலங்களில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு அலங்காரங்கள் செய்து மட்டுமே வழிபடுவார்கள்.

    ஆனால் திருவண்ணாமலையில் வீதிஉலா, தீர்த்தவாரி, வளைகாப்பு அலங்காரம் ஆகியவற்றோடு அன்று இரவு தீ மிதிக்கும் விழாவும் நடைபெறும். தமிழ்நாட்டில் வேறு எந்த பழமையான சிவாலயத்திலும் தீ மிதி விழா நடத்தப்படுவதில்லை. ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் தீ மிதி விழா நடைபெறுகிறது. இது திருவண்ணாமலை தலத்துக்கே உரிய தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.

    ஆடி மாதத்தில் இந்த உற்சவத்தை 10 நாட்கள் கோலாகலமாக நடத்துவார்கள். இந்த ஆண்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) இந்த உற்சவம் தொடங்குகிறது. 10 நாட்களும் காலையிலும், மாலையிலும் அஸ்திரதேவர் (சூலம்) எடுத்துச் செல்லப்பட்டு பராசக்தி வடிவில் மாடவீதி உலா நடைபெறும். 10-வது நாள் அதாவது வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பூரம் தினத்தன்று காலை முதல் நள்ளிரவு வரை திருவண்ணா மலை ஆலயமே கோலாகலமாக இருக்கும்.

    அன்று மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் உச்சிகாலத்தில் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அன்று இரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தீமிதித்தல் விழா நடைபெறும். உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு மிகப்பெரிய நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு இந்த விழா நடைபெறும். உண்ணாமுலை அம்மன் பராசக்தியாக வந்து தீ குண்டத்தில் எழுந்தருள்வாள்.

    இறைவன் தீயில் இருந்து தோன்றியவர் என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒருவரி உண்டு. அதை பிரதிபலிப்பது போல இந்த தீ மிதி விழா நடைபெறும். இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு வருமாறு:-

    ஒரு தடவை சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி தனது கைகளால் விளையாட்டாக மூடினார். இதனால் பிரபஞ்சம் அனைத்தும் இருளில் மூழ்கியது. உயிரினங்கள் அனைத்தும் தவித்தன. எல்லாவித தொழில்களும் நின்று போனது. உடனே அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    அப்போது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணை திறந்தார். இதனால் மீண்டும் பிரபஞ்சம் ஒளிபெற்றது. ஏழுஉலகிலும் இருள் விலகியது. அப்போதுதான் பார்வதிதேவிக்கு தனது தவறு தெரிய வந்தது. உடனே அவர் இதற்கு பிராயசித்தமாக, தனது பாவம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் பூலோகம் சென்று தவம் இருக்கும்படி உத்தரவிட்டார்.

    அதை ஏற்று பார்வதிதேவி மாங்காடு வந்தார். தீயை மூட்டி கடும் தவம் இருந்தார். பிறகு அங்கிருந்து காஞ்சீபுரம் சென்றார். அங்கு கம்பா நதிக்கரையோரத்தில் மணலை குவித்து லிங்கமாக உருவாக்கி பூஜை செய்து தவம் இருந்தார். காமாட்சியின் தவத்தை சோதிக்க நினைத்த சிவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார். உடனே காமாட்சி அந்த மணல் லிங்கத்தை தனது மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இதனால் கம்பா நதி இரண்டாக பிரிந்து லிங்கத்தை சுற்றி ஓடியது.

    இதையடுத்து சிவபெருமான் பார்வதிக்கு காட்சி கொடுத்தார். அப்போது பார்வதியிடம் அவர், “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் தருகிறேன்” என்றார். அதற்கு பார்வதி, “உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும். அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும். இது தவிர எனக்கு வேறு எந்த வரமும் வேண்டாம்” என்று கூறினார். உடனே சிவபெருமான் காஞ்சீ புரத்திற்கு தெற்கே ஒரு நகரம் ஒளிமயமாக திகழும். அந்த நகரை நினைத்தாலே முக்தி கிடைக்கும். அத்தகைய சிறப்புடைய அந்த தலத்துக்கு சென்று தவம் இருந்தால் உனக்கு இடது பாகத்தை தந்து அருள்வேன் என்றார்.

    அதை ஏற்று பார்வதி தேவி காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். அவருடன் முருகரும் சென்றார். வழியில் பார்வதி தேவி ஒரு இடத்தில் தங்கினார். அந்த இடத்தில் வாழை இலையால் பந்தல் அமைத்து கொடுத்து பார்வதி தேவிக்கு முருகபெருமான் உதவினார். இன்றும் அந்த இடம் வாழைப்பந்தல் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல அந்த பகுதியில் பார்வதியின் தாகம் தீர்ப்பதற்காக முருகப்பெருமான் தனது வேலை செலுத்தி ஒரு ஆறு உருவாக்கினார். அந்த ஆறு இன்றும் சேயாறு என்று அழைக்கப்படுகிறது.



    இந்த இடங்களை கடந்துதான் பார்வதிதேவி திருவண்ணா மலைக்கு சென்று அடைந்தார். முதலில் வடக்கு வீதிக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். பின்னர் தலேச்சுரம் எனும் மலை பகுதியை அடைந்தார். அந்த பகுதியில் கவுதமரும் அவரது மனைவி அகலிகையும் மகன் சதானந்தரும் மடம் அமைத்து வசித்து வந்தனர். அவர்கள் பார்வதியை வரவேற்று வணங்கினார்கள். பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி தவம் இருப்பதற்கு அவர்கள் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

    பார்வதி தேவி அமைத்த தவச்சாலையில் 7 கன்னியர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். 8 பைரவர்கள் நான்கு திசைகளையும் காத்தனர். அவர்களுக்கு மத்தியில் கூர்மையான ஊசி முனையில் ஒருகால் பெருவிரலை ஊன்றி பார்வதிதேவி தவம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் தேவர்கள் வந்து தங்களை மகிஷாசூரன் துன்புறுத்துவதாக முறையிட்டனர். அதை கேட்ட பார்வதி துர்க்கையை அனுப்பி மகிஷாசூரனை வதம் செய்தார். (இதிலிருந்துதான் நவராத்திரி விழா தோன்றியது. விரைவில் இன்னொரு அத்தியாயத்தில் இதுபற்றி விரிவாக காணலாம்)

    பார்வதியின் தவம் அதன் பிறகும் நீடித்தது. அதன் பிறகு ஒருநாள் கண்களில் நீர் பெருக திருவண்ணாமலை மலையை பார்வதி தேவி வலம் வந்தார். (இந்த நிகழ்வில் இருந்துதான் திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது) பார்வதியை கவுதம முனிவர்களும் அவரது சீடர்களும் வாத்தியங்கள் முழங்க பின் தொடர்ந்தனர்.

    பார்வதி தேவி அக்னி திசையில் வந்து மலையை பார்த்து வணங்கினார். பிறகு மேற்கு திசை நோக்கி நடந்தார். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தோன்றி பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்தார். பிறகு பார்வதிதேவி வாயு திசை, ஈசான திசை கடந்து கிழக்கு திசைக்கு வந்தார். அங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்தார். அதோடு அம்பாளை தனது இடப்பாகத்தில் ஈசன் சேர்த்துக் கொண்டார். இதன் மூலம் சிவசக்தியாக அவர்கள் காட்சி அளித்தனர். அதாவது சிவனும், பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமாக தோன்றினார்கள்.

    இரண்டு பேரும் ஓருடலாக மாறினார்கள். ஒரு பக்கம் சிவனின் சிவந்த சடை, மறுபக்கம் பார்வதியின் கொன்றை மாலை. ஒரு பக்கம் புஷ்ப மாலை, மறுபக்கம் சூலம். ஒரு புறம் பச்சை நிறம், மறுபக்கம் பவள நிறம். ஒரு பக்கம் சிவனின் அகன்ற மார்பு, மறுபக்கம் பார்வதியின் கச்சை அணிந்த கோலம், ஒரு பக்கம் புலித்தோல் ஆடை, மறுபக்கம் சேலை என்ற அழகான வடிவுடன் அர்த்தநாரீஸ்வரராக இருந்தனர்.

    சிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற சர்ச்சை தேவை இல்லை. ஒன்று இல்லாமல், இன்னொன்று இல்லை என்பதை தெரியப்படுத்த இந்த நிகழ்வு நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் தற்போதுள்ள பவழக்குன்று மலையில்தான் கவுதம மகரிஷியின் குடில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவழக்குன்று மலையில் உள்ள கோவில் கருவறையில் அர்த்தநாரீஸ்வர் வடிவம் உள்ளது.

    இதன் மூலம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய புனித தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. இதை பக்தர்களுக்கு உணர்த்தவே ஆடி மாதம் ஆடிப்பூரம் தினத்தன்று தீமிதித்தல் விழா மிக சிறப்பாக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருவதாக திருவண்ணாமலை ஆலய சிவாச்சார்யர்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சார்யார் தெரிவித்தார். ஆலயங்களில் தீ மிதித்தலுக்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு காரணத்தை சொல்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலையில் தீ மிதி விழா நடத்துவதில் தனி தத்துவம் அடங்கி உள்ளது.

    சிவபெருமானுக்கு மொத்தம் 8 வடிவங்கள் உண்டு. அதில் ஒரு வடிவம் அக்னி வடிவம். இந்த அக்னி வடிவத்தில்தான் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். தீயில் இருந்து தோன்றிய அண்ணாமலையாரை நாம் சென்றடைய வேண்டுமானால் பராசக்தியான உண்ணாமலை அம்மனின் அருள் வேண்டும். பராசக்தி கருணை பார்வை பார்த்தால்தான் நாம் ஈசனின் பாத கமலங்களில் சரண் அடைய முடியும்.

    நாமெல்லாம் சாதாரண ஜீவ ஆத்மாக்கள். பரமாத்மாவான ஈசனை அதாவது அக்னி வடிவில் இருக்கும் அண்ணாமலையானிடம் சென்றடைய வேண்டுமானால் அம்பாள் நமக்கு உதவ வேண்டும். அந்த உதவியைதான் தீ மிதித்தல் தினத்தன்று உண்ணாமலை அம்மன் நமக்கு செய்கிறாள். அதாவது தீ குண்டத்தில் அன்னை பராசக்தி எழுந்து அருள்பாலிக்கிறார். அந்த தீயின் மீது பக்தர்கள் நடந்து செல்லும்போது முக்திக்கான பாதை கிடைக்கிறது. இதனால்தான் திருவண்ணாமலை சுற்றுப்பகுதி வட்டாரத்தில் இந்த தீ மிதித்தலை, “தீ-விரத-சத்திநிபாதம்” என்று சொல்வார்கள்.

    உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு நடைபெறும் தீமிதித்தலில் திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 7-8 கிராம மக்கள் பங்கேற்று தீ மிதிப்பார்கள். அவர்கள் அனைவரும் குயவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். வேறு யாரும் அன்று தீ மிதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருவண்ணாமலை தலத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த தீமிதித்தல் விழா நடந்து வருகிறது. சுமார் 300 பேர் தீ மிதிப்பார்கள்.

    உண்ணாமலை அம்மனை வேண்டி விரதம் இருந்து அவர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் அவர்களுக்கு சந்தனம் பூசி பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்படும்.
    சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர்.
    சித்தர் மலை, சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர். கால ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சித்தர்களின் பெயர்களும், அற்புதங்களும் மறைந்து விட்டன.

    சில சித்தர்களுக்கு அண்ணாமலையார் புரிந்த அருள் மட்டுமே நம்மிடம் வரலாறாக உள்ளது. அவர்களில் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.....

    குகை நமசிவாயரின் சீடர் குரு நமசிவாயர். இவர் ஒரு சிறந்த தவயோகி. ஒருநாள் குகை நமசிவாயமும் குரு நமசிவாயமும் அருகருகே அமர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குரு நமசிவாயர் கலகலவென சிரித்தார்.

    ‘‘என்னடா? ஏன் சிரிக்கிறாய்?’’ என்று குகை நமசிவாயர் கேட்டார். ‘‘ஐயனே! திருவாரூர் தியாகேசன் தேரில் வருகிறார். தேவதாசி பரதமாடுகிறாள். கால் வழுக்கிவிடவே அதையும் அபிநயமாக அப்படியே மறைத்தாள்’’ அதுதான் சிரித்தேன் என்றார்.

    மற்றொரு நாள், தன் அறையில் இருந்த உடையை குரு நமசிவாயர் திடீரென்று தேய்த்தார். ‘‘என்னடா? என்ன விஷயம்?’’ என்றார் குகை நமசிவாயர்.
    ‘‘தில்லையில் விளக்கு போடுபவன் அஜாக்கிரதையால் திரைச்சீலையில் தீ பற்றிக் கொண்டது. யாரும் கவனிக்கவில்லை. அதைத்தான் அணைத்தேன்” என்றார் குரு நமசிவாயர்.

    குகை நமசிவாயர் உடனே இனி உனக்கு இங்கு வேலையில்லை. தில்லையிலே நீ செய்ய வேண்டிய பணி இருக்கிறது போ!’’ என்றார். குருநாதனை வணங்கி குரு நமசிவாயர் வலம் வந்தார். ‘‘குருநாதா! தங்கள் சித்தம்’’ என்றார். புறப்பட்டார். மரத்தடியில் வழியிலே களைப்புடன் தங்கினார். இரவு அர்த்தஜாம மணியோசை ‘ஓம் ஓம்’ என்று எங்கும் ரீங்காரம் செய்தது. பசியோடு அமர்ந்து,

    அண்ணாமலையார் அகத்திற்கு இனியாளே
    உண்ணாமுலையே உமையே தண்ணா
    நினைதோறும் போற்றிசெயும் நின்னடியார் உண்ண
    மனைதோறும் சோறுகொண்டுவா?

    - என்று அன்னையை நினைத்துப் பாடினார்.

    குரு நமசிவாயர் தவிப்பதைக் காணச் சகியாத தாய் உண்ணாமுலைநாயகி தங்கத் தாம்பாளத்தில் தனக்கு நிவேதனமாக வைத்த அர்த்த ஜாம சர்க்கரைப் பொங்கலை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியாற அந்த உணவை சாப்பிட்டு விட்டு தங்க தாம்பளத் தட்டை குரு நமசிவாயர் தூக்கி வீசி எறிந்தார்.

    கோவிலில் ‘தங்கத் தாம்பாளம் களவுபோய் விட்டது. அர்ச்சகர் கத்தினார். ஆனால் அவரை நம்பாமல் முன் பின் யோசியாமல் திருட்டுப் பட்டம் கட்டி அவரைத் தண்டிக்க முடிவு செய்தனர். உடனே அன்னை ஆவேசமாகி ‘என் பக்தன் பசியோடு இருந்தான். அவனுக்கு அந்தத் தங்கத் தாம்பாளத்தில் உணவளித்தேன். மரத்தடிக்குப் போனால் உங்கள் தட்டு கிடைக்கும்’ என்று கூறினாள்.

    ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று முழங்கியபடி சென்று அடியாரின் அடிகளைப் போற்றி தாம்பாளத்துடன் திரும்பினார்கள். இது வரலாற்றுச் சிறப்பு. இதே போன்று இன்னும் பல சித்தர்கள் உள்ளனர். ராஜாவின் இறந்த குதிரையை உயிர்த்தெழச் செய்து, திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருவாகி, குன்றக்குடி ஆதீனத்தை உருவாக்கிய ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி தேசிகர்.

    தீர்த்தக்குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (1290) அதில் தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாரை அபிஷேகம் செய்த சித்தமகா சிவயோகி, பாணிபத்திர சுவாமி. திருவண்ணாமலையில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல், தவமிருந்து மழையைப் பொழிய வைத்து, ஊரையே செழிக்கவைத்த மங்கையர்க்கரசியார்.

    தொண்ணூறு வயது வரை தினமும், மலையைத் தவறாமல் வலம் வந்து அந்தப் புண்ணியத்தால் அண்ணாமலையானையே நேரில் கண்டு, பரவசப் பேறு பெற்ற சோணாசலத்தேவர். யாழ்ப்பாணத்திலே பிறந்து, திருவண்ணாமலையில் குளமும், மடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.



    மக்களை திருத்துவதற்காக... பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர், படுபாவிகளின் கொடுவாளால் இருதுண்டுகளான பசுவை, உயிர்ப்பித்த பெருஞ்சித்தர் வீர வைராக்கியமூர்த்தி சுவாமிகள். ஐநூறு சீடர்ளைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையின் புகழைப் பரப்பியவர். ஆதார நூல்கள் பலவற்றை எழுதி, சைவசமயப் பெருமைகளை உலகறியச் செய்தவர், வேதாகம, சமயசாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர்.

    காவிரியாற்றின் நீரையே எண்ணையாக்கித் தீபம் ஏற்றியவர். கல்லாலான நந்திக்குக் கடலையைக் கொடுத்து உண்ணச் செய்தவர். பூமியிலிருந்து தீ ஜூவாலையை வரவழைத்து தனது திருமேனியையே... அக்னி தேவனுக்கு ஆஹ¨தியாக்கிய ஆதி சிவப்பிரகாசர். ஊமையாய்ப் பிறந்து, அண்ணாமலையாரின் பேரருளால், பாடும் திறனைப் பெற்றவர். விராலிமலை முருகப் பெருமான் கையால் பகலுணவு கொண்டவர். சிதம்பரத்தில் வாழ்ந்து திருவாரூரில் தியாகேசர் சன்னிதி முன்னால் சிவனடிச் ஜோதி கண்டு அதிலே கலந்து ஒளியான, தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.

    காணாமல்போன பூஜைப் பேழையை, அண்ணாமலையாரின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர். 16-ம் நூற்றாண்டில் குருதேவர் மடத்தில் தீட்சைபெற்று, ‘சிவப்பிரகாசர்’ எனும் ஞானியைக் கண்ட ஞானஞானி, குமாரசாமிப் பண்டாரம். கரிகால்சோழனின் காலத்திய பாதாள லிங்கமூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியிலே பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், ஆயிரம்கால் மண்டபம் கட்டியபோது, பாதாள லிங்கத்தை மாற்றி விடாமல் பாதுகாத்த ஞானயோகி, அழியா விரதம் கொண்ட தம்பிரான்.

    தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவசமாதி” கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன்துரையின் தீராத வியாதியைத் தீர்த்து வைத்தவர்.இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். (ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு. ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர். கேரள மாநிலத்தில் பிறந்து, இந்தியா முழுவதும் பாதயாத்திரை சென்று தியானத்திற்கு தகுந்த மலை, திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டவர். மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு, பக்தியை வளர்க்கப்பாடுபட்ட சற்குரு சுவாமிகள்.

    பழனியிலிருந்து திருவண்ணாமலை வந்து ஆலயத்துள் உழவாரப் பணி (தேவையற்ற செடி, கொடி, முட்களை நீக்குதல்) புரிந்தவர். அன்னக்காவடி சுமந்து, அடியார்களுக்கு உணவளித்தவர். பாதாள லிங்கக் குகையிலே பாலரமணரைப் பலகாலம் பாதுகாத்த பழனிச்சுவாமிகள். நெல்லையிலே அவதரித்துத் திருவண்ணாமலையில் முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லா தமிழ் வண்ணப் பாக்களோடு, கம்பத்து இளையனாருக்கு (திருவண்ணாமலை முருகனுக்கு) வேல்கொடுத்து வாழ்த்திய இசைஞானி, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

    கார்த்திகை தீபப் பரவச நிலையிலே காவல் தலைவரால் கன்னத்தில் அறையப்பட்டவர். ஊரார் கிளர்ந்தெழ, “அனைத்தும் என் முன்வினை” என்றவர். சித்தாந்த, வேதாந்தத் தத்துவங்களை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்குவதிலே சிம்மமாய்த் திகழ்ந்த காரியானூர் நடேச சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலே, அங்கம்புரள உருண்டு அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாகக் கொண்டவர். நாயன்மார்களின் வாழ்வையே வேதமெனக் கண்டவர்.

    திருவண்ணாமலையிலுள்ள அறுபத்துமூவர் மடாலயத்தின் ஆரம்பகால ஞானகுரு “அங்கப்பிரதட்சண” அண்ணாமலை சுவாமிகள். எல்லாம் “சிவா”, எப்போதும் “சிவா” எனச் சொல்லிச் சொல்லியே... அண்ணாமலையானின் திருவருள் பெற்று சிவஞான எல்லையிலே ஒளிகண்ட சிவா சுவாமிகள். திருவண்ணாமலைத் தேரடி வீதியிலே - புரண்டபடி கிடந்து, அருவுருவான அண்ணாமலையே, உமா மகேஸ்வரனாகக் கண்டு, தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார்புகழ் பெற்ற பத்ராசல சுவாமிகள்.

    காஞ்சியில் பிறந்து, திருவண்ணாமலைத் தெருக்களிலே... புரண்டு, உருண்டு, சாக்கடைச்சகதி நீரிலே அளைந்து, நனைந்து... பார்வைக்கு எளியனாய், பல தெய்வ ஒளியனாய்..... அகில உலகையும் திருவண்ணாமலைத் தெருவில் நின்றபடியே மனக்கண்ணால் காணும் பேராற்றல் பெற்ற...ஞானச்சித்தர் சேஷாத்திரி சுவாமிகள்.
    திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று, திருவண்ணாமலையின் நினைவால் மகரிஷியாகி உலகப் புகழ் பெற்ற பிறவித் துறவி, ரமண மகரிஷி.

    “அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்” என்று கன்னிப்பருவம் வரை காத்திருந்தவர். அண்ணாமலையார் அவர் கனவிலே வந்தார். கண் விழித்ததும், தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலைக்குச் சென்று இறுதிவரை ஆலயத் திருப்பணி செய்த சடைச்சியம்மாள்.

    திருவண்ணாமலையில் ஓரடிக்கு 1008, லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர ‘நமசிவாய’ 1008 ஜபத்துடன் “திருவண்ணாமலை”யை ஒவ்வொரு அடியாக நடந்து, கடந்து வலம்வந்து, பேரின்ப ஞான நலம் கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்ற இறை சுவாமிகள்.

    1917-ல் பிறந்து, ஆயிரத்து எட்டு முறை அண்ணாமலையையை அங்கப் பிரதட்சணம் கண்டவர். திருவண்ணாமலையில் உள்ள 360 தீர்த்தங்களையும் கண்ட கருணைவள்ளல். தேவரும், சித்தர்களும் கிரிவலம் செல்வதை ஞானக் கண்களால் அறிந்து கூறிய இசக்கி சுவாமிகள்.

    விரட்டுவதற்காக வீசிய கல், பறவையின் உயிரையே வாங்கி விட்டதால், கங்கைக் கரையிலே பிறந்த அவர், அமைதியைத் தேடி, காவிரிக்கரை வரை அலைந்தார். இறுதியில் திருவண்ணாமலையில் அமைதி பெற்ற விசிறி சாமியார் எனப்படும் சிவயோகி ராம் சுரத்குமார்.

    சாக்கடையில் புரண்டு திரிந்தவர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், ஆனால் அவரது திருமேனியில் சந்தனம் மணக்குமாம். இப்படி திருவண்ணாமலை தலத்தில் இருந்த இருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை அளவிட முடியாததாகும்.
    திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவ சமாதி பெற்றுள்ளனர். அவர்களில் இன்றும் புகழப்படும் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.
    தமிழ்நாட்டில் எத்தனையோ மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த மலைகளில் மிகுந்த தனித்துவமும், சிறப்பிடமும் கொண்டது திருவண்ணாமலை. சிவபெருமானே, மலையாக வீற்றிருப்பதால், சித்தப் புருஷர்களை அதிக அளவில் ஈர்க்கும் மலையாக திருவண்ணாமலை திகழ்கிறது. இதனால் தான் அண்ணாமலையை, ‘‘ஞானத் தபோவனரை வா என்று அழைக்கும் மலை’’ என்று குரு நமச்சிவாயர் குறிப்பிட்டுள்ளார்.

    சித்தர்களின் தவ பூமியாகத் திகழும் இந்த மலையில் கண்ணுக்கு தெரியாத நூற்றுக்கணக்கான சித்தர்கள் உள்ளனர். அவர்கள் ஈசனிடம் அருள்பெற்று, பக்தர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சில சமயங்களில் அந்த சித்தர்கள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதும் உண்டு. திருவண்ணாமலை மலை மட்டுமின்றி ஆலயமும் சித்தர்கள் ஆசி நிறைந்த இடமாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே திருமஞ்சன கோபுரம் அருகே பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சித்தர் ஒளிதேகம் பெற்ற இடம் உள்ளது.

    அதுபோல மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முக்தி மண்டபத்தில் அருணாசலேஸ்வரர், யோகியாக சூட்சும வடிவில் இன்றைக்கும் சித்தர்களுக்கு தரிசனம் தருவதாக சொல்கிறார்கள். அந்த முக்தி மண்டபம் அருகே அமர்ந்து தியானம் செய்தால் சித்தர்களின் அருளைப் பெற முடியும்.

    திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவ சமாதி பெற்றுள்ளனர். மற்றவர்கள் அரூப நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருமே ‘கிரிவலம் செல்ல வேண்டும்’’ என்பதையே பிரதானமாக வலியுறுத்தினார்கள். அவர்களில் இன்றும் புகழப்படும் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.

    கர்நாடகாவில் மல்லிகார்ச்சுனம் என்ற ஊரில் குகை நமசிவாயர் பிறந்தார். ஒருநாள் இவர் கனவில் தோன்றிய அண்ணாமலையார், ‘‘திருவண்ணாமலைக்கு வா’’ என்று அழைத்தார். அதை ஏற்று நமசிவாயர் புறப்பட்டு வந்தார்.

    தன் சீடர்கள் 300 பேருடன் அவர் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக இருந்தார். வரும் வழியில் நமசிவாயர் ஒரு வீட்டில் திருமணம் நடப்பதைக் கண்டார். அவ்வீட்டினர் நமசிவாயரை ஆசி வழங்கும்படி வேண்டினர். அவ்வீட்டாருக்கு திருநீறு கொடுத்தார். அவர்கள் திருநீறைப் பூசிய போது, அவ்வீட்டில் தீப்பிடித்தது. தீப்பிடிப்பதற்கு நமசிவாயரின் வருகையே காரணம் என அவர்கள் நினைத்தனர்.

    ஆனால், நமசிவாயர், தன் அருட் சக்தியால் எரிந்த பொருட்களை மீண்டும் வரவழைத்தார். பின், அவர்கள் பூந்தமல்லியை வந்தடைந்தனர். அங்குள்ள கோவில் நந்தவனத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்து வரும்படி குகை நமசிவாயர் தமது சீடர்களை அனுப்பினார். அந்த பூக்களை மாலையாக்கி சிவனுக்கு அணிவித்தார். உரியவரைக் கேட்காமல், பூப்பறித்தது குற்றம் என கோவில் நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

    பறித்த பூக்கள் எல்லாம் சிவனுக்காகவே அணிவிக்கப்பட்டன. ஒரு பூ கூட வீணாகவில்லை, என்று நமசிவாயர் விளக்கம் தந்தார். அதற்கு கோவில் நிர்வாகிகள் உம் வார்த்தை உண்மையானால், சிவனுக்கு அணிவித்த மலர்மாலை உங்கள் கழுத்தில் வந்து விழுமா, என சவால் விட்டனர். நமசிவாயரும் பக்தியுடன், நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பக்தியுடன் வணங்கினார். அனைவரும் அதிசயிக்கும்படி மலர் மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது.

    அப்பகுதியை ஆட்சி செய்து வந்த வேற்று சமய மன்னனுக்கு இச்செய்தி எட்டியது, நமசிவாயரை அழைத்து, எல்லா சமயத்தையும் விட சைவமே உயர்ந்தது என்பது உண்மையானால், நான் சொல்வதைச் செய்ய வேண்டும்! என்று கட்டளையிட்டான். சைவமே சிறந்த சமயம், சிவபெருமானே உயர்ந்த தெய்வம்! என்று சொல்லிக் கொண்டு நன்கு காய்ச்சிய இரும்பை பிடித்து காட்டுங்கள்! என்றான்.

    அதற்கு நமசிவாயர், இதற்கு நான் எதற்கு, என் சீடனே இதைச் செய்வானே என்று விரூபாட்சித் தேவரை நோக்கி கண்களால் கட்டளையிட்டார். செந்தழல் மேனிச் சிவனே போற்றி என்று சிவபிரானை வணங்கிய விரூப்பாட்சிய தேவர் பழுக்கக் இரும்பினைக் கையில் எடுத்து, இதுவும் ஈசன் அருளால் பழுத்த கனியே என்று சொல்லி விழுங்கிவிட்டார். இதனைக் கண்ட மன்னன் மனம் திருந்தி, சிவபக்தன் ஆனான்.

    சிலகாலம் கழித்து, நமசிவாயர் சீடர்களுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். திருவண்ணாமலையில் இருந்த ஒரு குகையில் வசிக்கத் தொடங்கினார்.
    அதன்பின், அவருக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் ஏற்பட்டது. சீடர்களும் தானும் நீராடுவதற்காக நான்கு குளங்களை அவர் வெட்டினார். அவை திருமுல்லைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று பெயர் பெற்றன.

    குகை நமசிவாயர் தினமும் குகையை விட்டு அதிகாலையில் வெளியே வருவார். மலையைச் சுற்றி கண்ணோட்டம் விடுவார். ‘‘அருணாசலா நீ சுகம் தானே’’ என உரக்கக் கேட்பார். “சுகம், சுகம்’’ என மலை எதிரொலிக்கும். ஆனால் ஈசன் தரிசனம் அவருக்கு ஒருநாளும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த குகை நமசிவாயர் ஒரு நாள் இரக்கமற்ற அருணாசலா நீ மட்டும் சுகமாயிரு என்று குமுறலுடன் கூறினார்.

    அண்ணாமலையார் மீது குகை நமசிவாயர் பல பாடல்களைப் பாடினார். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் அவருக்கு அண்ணாமலையார் வழங்கினார். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.



    அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகளாக இருந்தன. இவருடைய சீடர்களுள் விரூபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.

    ஒருநாள், அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, குகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழுதபடியே அவரை நோக்கி ஓடி வந்தாள். சுவாமி! அபலையான என்னைக் காப்பாற்றுங்கள். என் கணவர் திடீரென்று இறந்துவிட்டார். வாழும் வழி தெரியாமல் நிர்கதியாய் இருக்கும் எனக்கு, உங்களை விட்டால் வேறு துணையில்லை, என்று பாதங்களில் விழுந்தாள்.

    இரக்கப்பட்ட குகை நமசிவாயர், கலங்காதே! அண்ணாமலையார் துணையிருப்பார். உன் கணவர் சிவனருளால் உயிர் பெறுவார். வீட்டுக்கு நிம்மதியாகச் செல். எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என்று ஆறுதல் கூறி வழி அனுப்பினார். அதன்படியே, அவளது கணவரும் உயிர் பெற்று எழுந்தார். குகை நமசிவாயர் வாழ்ந்த காலத்தில், நகித் என்ற கொடியவன் திருவண்ணாமலையில் வசித்து வந்தான். கோவிலுக்கு வரும் பெண்களிடம் அட்டகாசம் செய்தான்.

    இதைக்கண்டு கோபமுற்ற குகை நமசிவாயர், ஈசனே! உம் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்து விட்டீரோ?, என்னும் பொருளில் பாடினார். இதன்பின் நகித்தின் முதுகில் ராஜபிளவை என்னும் நோய் உண்டானது. நோயின் வேதனையைத் தாங்க முடியாமல் உயிர் விட்டான். இவ்வாறு பலவித அற்புதங்களைச் குகை நமசிவாயர் செய்தார்.

    ஏராளமானவர்களின் நோய்களை தீர்த்துள்ள குகை நமசிவாயர் நடத்திய சித்தாடல்கள் ஏராளம். ஒருதடவை இறந்து போன ஆட்டுக்கு உயிர் கொடுத்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினார். உடனே சிலர் ஒருவனை செத்தவன் போல நடிக்க செய்து, பாடையில் கட்டி குகை நமசிவாயரிடம் தூக்கிச் சென்றனர். ‘‘சாமீ இவன் செத்துப் போயிட்டான். ஆட்டுக்கு உயிர் கொடுத்தது போல இவனுக்கும் உயிர் கொடுங்கள்’’ என்று கிண்டலாகக் கேட்டனர்.

    உடனே குகை நமசிவாயர், ‘‘ஆமா... .... இவன் செத்து போயிட்டான். கொண்டு போய் புதைத்து விடுங்கள்’’ என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் சிரித்தனர்.
    ‘‘டேய் எழுந்திருடா... சாமீ பொய் சொல்றாருடா...’’ என்றனர். ஆனால் பாடையில் படுத்து வந்தவன் எழுந்திருக்கவில்லை. உண்மையிலேயே செத்து போய் விட்டான். இந்த சம்பவத்துக்குப் பிறகு திருவண்ணாமலையில் குகை நமசிவாயரை, அனைவரும் பயபக்தியுடன் நடத்தினார்கள்.

    குகை நமசிவாயர் மூலம் அண்ணாமலையாரின் புகழ் நாட்டின் நாலாபுறமும் பரவியது. இதனால் அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் இன்றும் உற்சவ காலங்களில் அண்ணாமலையார் வீதி வலம் வரும்போது அவரது தேருக்கு பின்னே குகை நமசிவாயரும், விரூபாட்சித் தேவரும் தனி தனி பல்லக்குகளில் வலம் வருகிறார்கள். ஒருதடவை அண்ணாமலையார், ‘‘குகை நமசிவாயர் வருகிறாரா என்று திரும்பி திரும்பிப் பார்த்து கழுத்து வலிக்கிறது.

    எனவே குகை நமசிவாயர் முதலில் செல்லட்டும்’’ என்றாராம். அன்று முதல் உற்சவ வீதி உலாக்களில் குகை நமசிவாயர் தேர் முதலில் செல்வது குறிப்பிடத்தக்கது. குகை நமசிவாயர் மீது அண்ணாமலையார் காட்டிய அன்புக்கு இவையெல்லாம் உதாரணமாக உள்ளன. ஒருதடவை குகை நமசிவாயர் ஜீவசமாதி ஆக நினைத்த போது மேலும் 100 ஆண்டுகள் வா-ழ அண்ணாமலையார் அவருக்கு ஆயுளை நீட்டித்தாராம்.

    ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று குகை நமசிவாயர் தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார்.

    அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா... எல்லாம் சரிதான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு குகை நமசிவாயருக்கு முதல் வாரிசு பிறந்தது.

    ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். அவர் எழுதிய பாடல்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்று மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமச்சிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும்.

    மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமச்சிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்கனத்தில் குருபூஜை நடந்து வருகிறது. 500 ஆண்டுகளை கடந்து குகை நமசிவாயருக்கு குருபூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் குகை நமச்சிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். குகை நமசிவாயரின் 18-வது வாரிசுதாரர் தற்போது இந்த ஜீவசமாதியை பராமரித்து வருகிறார்.
    மாணிக்கவாசகர் குரு பூஜை தினத்தன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடுவதோடு மாணிக்கவாசகரையும் வழிபட்டால் திருமணம் கைகூடும் பாக்கியத்தை பெற முடியும்.
    திருவண்ணாமலை ஆலயத்தில் நடத்தப்படும் பிரமோற்சவங்களில் ஆனி மாதம் நடத்தப்படும் தட்சிணாயண புண்ணிய கால பிரமோற்சவம் மிகவும் முக்கியமானது. இந்த பிரமோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். ஆதிகாலத்தில் திருவண்ணாமலையில் இந்த பிரமோற்சவம்தான் மிக மிக விமரிசையாக நடந்ததாக குறிப்புகள் உள்ளன.

    கார்த்திகை தீப திருவிழாவை விட ஆனி மாத தட்சிணாயண புண்ணிய கால பிரமோற்சவம்தான் அதிக சிறப்பாக நடந்ததாக சொல்கிறார்கள். இத்தகைய சிறப்பு கொண்ட தட்சிணாயண பிரமோற்சவம் இந்த ஆண்டு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. காலை-மாலை இரு நேரமும் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது.

    நாளை (13-ந்தேதி) வெள்ளிக்கிழமை இந்த பிரமோற்சவத்தின் 7-ம் நாள் திருவிழா ஆகும். திங்கட்கிழமை (16-ந்தேதி) தட்சிணாயண பிரமோற்சவத்தின் 10-ம் நாள் திருவிழா நடைபெற உள்ளது. அன்று உற்சவர் ஸ்ரீசந்திரசேகரர் அய்யங்குளத்துக்கு சென்று தீர்த்தவாரி செய்வார். இதையடுத்து அவரது வீதிஉலா நடைபெறும். மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடத்துவார்கள்.

    அதே தினத்தன்று மாணிக்கவாசகரின் குரு பூஜையும் நடைபெற உள்ளது. நாயன்மார்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகருக்கு திருவண்ணாமலையில் தனி ஆலயம் உள்ளது. கிரிவல பாதையில் வருணலிங்கம் அருகே அடிஅண்ணாமலை ஆலயத்திற்கு செல்லும் பாதை திருப்பத்தில் அந்த ஆலயம் அமைந்துள்ளது.

    திருவண்ணாமலையில் எத்தனையோ மகான்கள் தங்கள் திருவடிகளை பதித்து சேவை புரிந்துள்ளனர். அவர்களில் மாணிக்கவாசகருக்கு தனி இடம் உள்ளது. அதற்கு காரணம் திருவண்ணாமலை தலத்தில் அவர் இயற்றிய திருவெம்பாவை பாடல்கள்தான்.

    9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் மதுரை அருகே திருவாதவூரில் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு திருவாதவூரார் என்றே பெயரிட்டனர். இளம்வயதிலேயே தமிழ் பக்தி இலக்கியத்தில் புலமை பெற்றிருந்த அவரது புகழ் நாடெங்கும் பரவியது. அந்த சமயத்தில் மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.

    அவன் திருவாதவூராரின் திறமையை அறிந்து அவரை அழைத்து தலைமை அமைச்சராக நியமித்தான். ஒரு தடவை சோழநாட்டில் குதிரைகள் வந்திருப்பதாக அறிந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அந்த குதிரைகளை வாங்குவதற்காக திருவாதவூராரிடம் நிறைய பொற்காசுகளை கொடுத்து அனுப்பி வைத்தான்.

    சோழ நாட்டுக்கு புறப்பட்டு சென்ற திருவாதவூரார் அறந்தாங்கி அருகே உள்ள திருபெருந்துறையை அடைந்ததும் அங்குள்ள ஒரு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குரு வடிவம் எடுத்து அமர்ந்து இருப்பதை கண்டார். உள்ளம் உருகிய திருவாதவூரார் தன் கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் அங்கு சிவாலயம் கட்டுவதற்கு செலவழித்தார். அதோடு சிவபெருமான் மீது நிறைய பாடல்களையும் பாடினார்.

    அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டினார். அன்று முதல் அவரது பெயர் மாணிக்கவாசகர் என்று மாறியது. இதற்கிடையே குதிரை வாங்க சென்ற அமைச்சரை காணவில்லையே என்று படை வீரர்களை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அனுப்பி வைத்தான். அந்த படை வீரர்கள் திரும்பி வந்து திருவாதாவூரார் குதிரை வாங்கவில்லை, பொற்காசுகளை எல்லாம் சிவாலயம் கட்ட செலவழித்து விட்டார் என்று தெரிவித்தனர்.

    இதனால் கோபம் அடைந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை இழுத்து வரும்படி உத்தரவிட்டார். அதன்படி மாணிக்கவாசகர் மதுரைக்கு இழுத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் சிவனை நோக்கி மனமுருக வேண்டினார். தனது பக்தன் கஷ்டப்படுவதை கண்ட சிவபெருமான் அவரை மீட்க திருவிளையாடல் நடத்தினார்.

    நிறைய நரிகளை பரி(குதிரை)களாக மாற்றி அனுப்பினார். அதை உண்மை என்று நம்பிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் உடனே மாணிக்கவாசகரை விடுதலை செய்தான். ஆனால் அன்று இரவே பரிகள் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறின. இதை கண்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன் கோபத்துடன் மாணிக்கவாசகரை தண்டித்தான். அப்போதும் சிவபெருமான் திருவிளையாடல் செய்து மாணிக்கவாசகரை மீட்டார்.

    பிறகு மாணிக்கவாசகரிடம் இனி நீங்கள் ஆலயம் ஆலயமாக சென்று திருப்பணி செய்யும்படி சிவபெருமான் உத்தரவிட்டார். அதை ஏற்று மாணிக்கவாசகர் தல யாத்திரை புறப்பட்டார். அவர் எந்தெந்த ஆலயங்களுக்கு செல்கின்றாரோ அங்கெல்லாம் பாடல்கள் பாடினார்.

    1. நமச்சிவாய வாழ்க என தொடங்கும் சிவபுராணம், 2. அற்புதப் பத்து, 3. அதிசயப்பத்து, 4.குழைத்த பத்து, 5. சென்னிப் பத்து, 6. ஆசைப் பத்து, 7. வாழப்பத்து, 8. அடைக்கலப் பத்து, 9. செத்திலாப் பத்து, 10. புணர்ச்சிப் பத்து, 11. அருட்பத்து, 12. திருவார்த்தை, 13. எண்ணப் பதிகம்,14. திருவெண்பா (பண்டாய நான்மறையும் இதில் சேர்க்கப்பட்டது), 15. திருப்பள்ளியெழுச்சி, 16. திருவேசறவு, 17. ஆனந்த மாலை, 18. உயிருண்ணிப்பத்து, 19. பிரார்த்தனைப் பத்து, 20. திருப்பாண்டிப் பதிகம், 21. திருச்சதகம், 22. நீத்தல் விண்ணப்பம், 23. திருப்புலம்பன், 24. பிடித்த பத்து ஆகியவற்றை படைத்தார். இந்த நூல்களில் உள்ள பதிகங்கள் அனைத்தும் படித்து படித்து இன்புற தக்கவையாகும்.



    பாண்டிய நாடு, சோழ நாடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இந்த பாடல்களை அவர் பாடி இருந்தார். அங்கு தல யாத்திரை முடித்து விட்டு விருத்தாசலம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் இருக்கும் அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்தார்.

    அப்போதுதான் அவர் சிவபெருமானின் பெருமையை சொல்லும் திருவெம்பாவை பாடல்களை இயற்றினார். சிவபெருமான் திருவண்ணாமலையில் அடியும் முடியும் காண முடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்தும் வகையில், “ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே” என பாடினார். அவர் மார்கழி மாதத்தில் இந்த பாடல்களை பாடினார்.

    வைணவத்தில் மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை பாடல்களை பாடியப்படி தனது தோழியர்களுடன் ஆற்றுக்கு குளிக்க செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதுபோல சைவத்தில் சிவபெருமானை பெண்கள் மார்கழி மாதம் புகழ்ந்து பாடுவதற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவை படைத்தார்.

    ஆதி அண்ணாமலை ஆலயத்தின் அருகே தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்துக்கு மாணிக்கவாசகர் தீர்த்தக்குளம் என்று பெயர். 9-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண்கள் அந்த தீர்த்தக்குளத்தில் நீராடி இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு “பாவை நோன்பு” இருப்பது வழக்கமாகும். அந்த பெண்கள் சிவபெருமானின் சிறப்புகளை பாட வேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் திருவெம்பாவையை படைத்தார்.

    அந்த பாடல்களை திருவண்ணாமலையில் உள்ள பெண்கள் பாடி அண்ணாமலையாரை துதித்தனர். அந்த பாடல்களை கேட்டு சிவபெருமானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். உள்ளம் உருகிய அவர் மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில்தான் திருவண்ணாமலையில் தற்போது அவருக்கான ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    அந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் காட்சி தந்த விழா நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆனி மாதம் மகம் நட்சத்திரம் நாளில் மாணிக்கவாசகரின் குரு பூஜையும் நடத்தப்படுகிறது. அன்று மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    இந்த ஆண்டுக்கான மாணிக்கவாசகர் குரு பூஜை வருகிற திங்கட்கிழமை (16-ந்தேதி) நடைபெற உள்ளது. அன்று திருவெம்பாவை பாடல்களை பாடுவார்கள். ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் மாணிக்கவாசகருக்கு தீபாரதனை காட்டப்படும். இந்த பூஜையில் பங்கேற்றால் அபரிமிதமான பலன்களை பெறலாம்.
    அன்றைய தினம் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையை அந்த தலத்தில் அமர்ந்து பாடி சிவனையும், பார்வதியையும் வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும். திருமணம் ஆன பெண்களுக்கு வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.

    மாணிக்கவாசகருக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் வரிசையில் நால்வர்கள் சிலைகள் தனியாக உள்ளன. அங்கு இடம் பெற்றுள்ள மாணிக்கவாசகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். அன்று காலை சிறப்பு ஆரத்தி நடைபெறும்.

    திருவண்ணாமலை தலத்தில் சில ஆண்டுகள் இருந்த பிறகு மீண்டும் தல யாத்திரையை தொடங்கிய மாணிக்கவாசகர் பல்வேறு ஆலயங்களுக்கு சென்றார். இறுதியில் அவர் தனது 32-வது வயதில் சிதம்பரத்தில் நடராஜருடன் ஐக்கியம் ஆகி விட்டார். ஞானநெறியை பின்பற்றிய மாணிக்கவாசகர் இறைவனுக்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டுகள் காலத்தால் மறையாதவை.

    சிதம்பரத்தில் அவர் சொல்ல சொல்ல சிவபெருமானே ஓலைச் சுவடிகளில் பாடல்களை எழுதினார். அந்த பாடல்களின் முடிவில் “மாணிக்கவாசகர் சொற்படி அம்பலவாணன்” என்று சிவபெருமான் கையெழுத்திட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவைதான் திருவாசகமும், திருக்கோவையுமாகும்.

    திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். அந்த மகிமையும் சிறப்பும் பெருமையும் மாணிக்கவாசகருக்கு உண்டு. மாணிக்கவாசகர் மொத்தம் 656 பாடல்கள் பாடினார். அந்த பாடல்களின் கூட்டு தொகை 8 ஆகும். அதனால்தான் என்னவோ திருமுறை நூல்களில் 8-ம் திருமுறையாக மாணிக்கவாசகரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    மாணிக்கவாசகர் தமிழ்நாட்டில் எத்தனையோ தலத்துக்கு சென்று இருந்தாலும் திருவண்ணாமலை தலத்தில் அவர் இருந்த நாட்கள் தனித்துவம் வாய்ந்தவை. திருவெம்பாவை உருவாக அந்த நாட்கள்தான் காரணமாக இருந்தன. எனவே மாணிக்கவாசகர் குரு பூஜை தினத்தன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடுவதோடு மாணிக்கவாசகரையும் வழிபட்டால் திருமணம் கைகூடும் பாக்கியத்தை பெற முடியும்.

    திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்களில் 99 சதவீதம் பேர் மாணிக்கவாசகர் பற்றி தெரிந்தும், தெரியாதது போல, மாணிக்கவாசகர் ஆலயத்தை கடந்து சென்று விடுகிறார்கள். இனியாவது அண்ணாமலையார் புகழ் பாடிய மாணிக்கவாசகருக்கு மரியாதை செலுத்துங்கள்.
    பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அம்மணி அம்மாள் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம்.
    ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.
    அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

    அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

    அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
    அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

    ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

    சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
    தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

    இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

    குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

    அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.

    பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.

    அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.

    இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.



    அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.

    பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.

    அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.

    மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

    அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.

    171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

    திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

    பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார்.  திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.

    அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருவமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.

    அம்மணி அம்மாள் பற்றிய கூடுதல் தகவல்களை 90421 40747 என்ற எண்ணில் ரமேஷ் என்பவரிடம் பெறலாம். 
    இடைக்காடர் எனும் மகாசித்தர் திருவண்ணாமலை தலத்தில் அடங்கி இருக்கிறார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்குள் அவரது ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது.
    தமிழ்நாட்டில் எண்ண முடியாத அளவுக்கு எத்தனையோ சித்தர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த சித்தர்கள் உறைந்து அருள்பாலிக்கும் இடங்கள்தான் நாளடைவில் மிகப்பெரும் புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களாக மாறி இருக்கின்றன.

    ஒவ்வொரு பழமையான ஆலயத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். அந்த வகையில் பதினெண் சித்தர்களாக கருதப்படும் 18 சித்தர்கள் உறைந்துள்ள 18 ஆலயங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதில் இடைக்காடர் எனும் மகாசித்தர் திருவண்ணாமலை தலத்தில் அடங்கி இருக்கிறார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்குள் அவரது ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலயத்துக்குள் எந்த பகுதியில் அவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் இடைக்காடர் சமாதி திருவண்ணாமலை மலை உச்சியில் இருப்பதாக சொல்கிறார்கள்.
    பொதுவாக சித்தர்கள் பல்வேறு வகையான சமாதி நிலைகளை எட்டுவது உண்டு.

    மறுபிறவியற்ற நிர்விகற்ப சமாதி, நன்மை, தீமை இரு நிலையுடன் கூடிய விகற்ப சமாதி, உடலுக்கும், மனதுக்கும் சஞ்சீவி தன்மை அளிக்கும் சஞ்சீவனி சமாதி, உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டு உயிரைப் பிரிக்கும் காயகல்ப சமாதி, நீண்ட யோகா பயிற்சி மூலம் உடலை ஒளி உடலாக மாற்றிக் கொள்ளும் ஒளி சமாதி மற்றும் மகா சமாதி, விசார சமாதி, விதர்க்க சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி என்று பலவகைகள் உண்டு.

    இதில் இடைக்காடர் ஒளி சமாதி ஆகி இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக அவரது ஒளி சமாதியாக கருதப்படும் இடமும் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகத் தான் மக்கள் அந்த ஒளி சமாதியை தெரிந்து கொண்டு வழிபட தொடங்கி உள்ளனர்.

    இதுபற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு, இடைக்காடர் சித்தர் யார்? அவர் எப்படி திருவண்ணாமலைக்கு வந்தார்? திருவண்ணாமலை தலத்தில் என்னென்ன அற்புதங்களை செய்தார் என்பதை பார்க்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் என்று ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரில்தான் இடைக்காடர் சித்தர் அவதரித்தார். கோனார் என்று அழைக்கப்படும் இடையர் சமுதாயத்தில் பிறந்ததால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    இடைக்காடர் எப்போதும் சிவசிந்தனையிலேயே ஆழ்ந்து இருப்பார். பிறந்தது முதல் அவருக்கு இந்த சித்தி வாய்த் திருந்தது. ஆடுகளை மேய்ச்சலில் விடுவதற்காக காட்டுக்குள் அழைத்து செல்லும்போது அவர் ஏதாவது மரத்தடியில் அமர்ந்து சிவசிந்தனையில் ஏகாந்த நிலைக்கு சென்று விடுவார்.

    ஆடு மேய்ப்பது, பால் கறப்பது, புல்லாங்குழல் ஊதுவது, சிவசிந்தனையில் ஆழ்ந்து விடுவது.... இதுதான் இடைக்காடரின் தினசரி வாழ்வியல் வழக்கமாகும். தினமும் அவர் ஆடுகளை காட்டுக்கு அழைத்து சென்று மேய வைத்துவிட்டு வருவார். ஒருநாள் அப்படி அவர் காட்டுக்குள் சென்றபோது ஒரு மரத்தடியில் சிவசிந்தனையில் ஆழ்ந்தார்.

    அப்போது வான்மார்க்கத்தில் போகர் சித்தர் சென்று கொண்டிருந்தார். அவர் சிவசிந்தனையில் ஆழ்ந்துள்ள இடைக்காடரை பார்த்ததும் வான் மண்டலத்தில் இருந்து இறங்கி வந்து பார்த்தார். அவர் தனக்கு தாகமாக இருப்பதால் பால் தருமாறு கூறினார். உடனே இடைக்காடர் ஆட்டு பால் கொடுத்து போகரை உபசரித்தார்.



    இதனால் மகிழ்ச்சி அடைந்த போகர் வைத்திய, வாத, யோக, ஞானங்களை இடைக்காடருக்கு கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி ஜோதிடத்தில் உள்ள அனைத்து கலைகளையும் கற்று கொடுத்தார். இதனால் இடைக்காடர் சாதாரண நிலையில் இருந்து சித்த புருஷராக மாறினார்.

    போகரை குருவாக ஏற்று அவர் செயல்பட்டார். கருவூராரும் அவருக்கு குருவாக இருந்ததாக சொல்வார்கள். இடைக்காடர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. சித்தர்களின் கால தொடக்கம் நான்காம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. எனவே அப்போது இடைக்காடர் வாழ்ந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    சித்தராக உயர்ந்த இடைக்காடர் நிறைய நூல்கள் எழுதினார். வைத்தியம் தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் உயர்வானவை. அதுபோல முக்தி பெற அவர் பாடி உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் நமது மனதை பண்படுத்தக்கூடியவை.

    ஜோதிடத்தில் அவர் எழுதிய கணிப்புகள் இன்று ஜோதிட உலகுக்கு வழிகாட்டும் வகையில் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே இடைக்காடர் எழுதி வைத்துள்ளார். அந்த குறிப்புகளை வைத்துதான் இப்போது ஆண்டு தோறும் பஞ்சாங்கம் தயாரித்து வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஆற்றல் கொண்ட இடைக்காடர் திருவண்ணாமலை தலம் உருவாகவும், புகழ் பெறவும் அடித்தளம் அமைத்து கொடுத்தார். அதற்கான சான்றுகள் திருவண்ணாமலை தலம் முழுக்க உள்ளன. ஆனால் அண்ணாமலையாரை வழிபட செல்பவர்களுக்கு அந்த நுணுக்கங்கள் தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே.
    இவர் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார். ஆனால் போகர்தான் இவரை திருவண்ணாமலை தலத்துக்கு அனுப்பியதாக வரலாறு உள்ளது.

    திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்த உலகில் விரைவில் மிகப்பெரிய பஞ்சம் வரப்போவதையும் பஞ்சம் சுமார் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதையும் தனது ஜோதிட திறமையால் உணர்ந்தார். தனது தெய்வத் தன்மையை பயன்படுத்தி அந்த பஞ்சத்தை எதிர்கொள்ள முடிவு செய்தார். அதன்படி தனது ஆடுகளுக்கு எருக்கம் இலையை உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார். பொதுவாக எருக்கம் செடிகள் எந்த கொடிய வறட்சியிலும் தாக்குப்பிடித்து நிற்கும் தன்மை கொண்டது. எனவேதான் அவர் அதை தனது ஆடுகளுக்கு உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார்.

    பிறகு 12 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் வரகு எனும் தானியத்தை மண்ணோடு சேர்த்து சுவர்கள் எழுப்பி குடிசை கட்டினார். அவர் எதிர்ப்பார்த்தபடியே பஞ்சம் வந்தது. எல்லா உயிரினங்களும் பஞ்சத்தில் சிக்கி அழிந்தன. ஆனால் இடைக்காடருக்கும், அவர் வளர்த்த ஆடுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவரது ஆடுகள் எருக்கம் இலையை தின்று உயிர் வாழ்ந்தன. இடைக்காடர் குடிசை வீட்டு சுவரில் பதிய வைத்திருந்த வரகு தானியத்தை தட்டி எடுத்து ஆட்டு பாலில் காய்ச்சி குடித்து உயிர் வாழ்ந்தார்.

    இதைப் பார்த்த நவக்கிரகங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. நாம் திட்டமிட்டு கிரக நிலைகள் மூலம் வறட்சியை ஏற்படுத்தினாலும் இடைக்காடர் மட்டும் எப்படி உயிர் தப்பினார் என்று யோசித்தனர். இதற்கு விடை காண்பதற்காக இடைக்காடர் வாழும் குடிசைக்கு நவக்கிரகங்கள் வந்தனர். நவக்கிரகங்களை வரவேற்ற இடைக்காடர் அவர்களுக்கு வரகு உணவு தானியத்தையும், ஆட்டு பாலையும் கொடுத்து உபசரித்தார். ஆட்டு பாலில் சமைத்த உணவை சாப்பிட்டதால் நவக்கிரகங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது. அவர்கள் அப்படியே தூங்கிப் போனார்கள்.



    கிரகங்கள் மாற்றத்தால் தான் மழை பெய்யவில்லை என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த இடைக்காடர் மழை பெய்ய வைக்கும் வகையில் நவக்கிரகங்களின் நிலைகளை மாற்றிப் படுக்க வைத்தார். அடுத்த கணமே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. உலகம் முழுக்க உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. தொடர் மழை காரணமாக உலகமே குளிர்ந்தது.

    தங்களை சுற்றி திடீரென குளிர்ச்சி தன்மை உருவாகி இருப்பதை உணர்ந்த நவக்கிரகங்கள் விழித்து எழுந்தனர். உலகில் பஞ்சம் நீங்கி எங்கு பார்த்தாலும் தண்ணீர் வளம் அதிகமாகி குளிர்ச்சி பெற்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இடைக்காடர் மூலம்தான் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

    இடைக்காடரை இதற்காக பாராட்டினார்கள். அவரை வாழ்த்தி ஆசீர்வதித்து விட்டு சென்றனர். திருவண்ணாமலை தலத்தில் நடந்த இந்த அதிசயம் உலகம் முழுக்க பரவியது. இதற்கு என்ன சான்று இருக்கிறது என்று பலரும் கேட்கலாம். திருவண்ணாமலை தலத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் இதற்கு விடை கிடைக்கும்.

    திருவண்ணாமலைக்குள் நுழைவதற்கு 9 வழிகள் உள்ளன. திருவண்ணாமலையில் சிவபெருமானே மலையாக வீற்று இருப்பதால் அவரை சுற்றி கிரிவலம் வருவது நடைமுறையில் உள்ளது. இந்த கிரிவல பாதை மொத்த தூரம் 9 மைல்கள் ஆகும். திருவண்ணாமலையில் ஈசனின் பாதம் 9 இடங்களில் உள்ளது. கிரிவல பாதையில் 9 லிங்கங்கள் உள்ளன. 9 நந்திகள் உள்ளன. திருவண்ணாமலை கோவிலுக்குள் 9 கோபுரங்கள் அமைந்துள்ளன. இப்படி நவக்கிரகங்களான 9 என்ற அமைப்புக்கும், திருவண்ணாமலையில் உள்ள முக்கிய விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    திருவண்ணாமலையில் நவக்கிரகங்கள் மாற்றப்பட்டதற்கு இவைதான் உதாரணமாகும். திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நேரம் சரியில்லை. அதற்கு பரிகாரம் காண வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கிரிவலம் மேற்கொள்ள வருகிறார்கள். நவக்கிரகங்களை மாற்றி எப்படி இந்த உலகுக்கு இடைக்காடர் நன்மையை உருவாக்கினாரோ அதுபோல கிரிவலம் வரும் ஒவ்வொருவரின் கிரக தோஷங்களையும் இடைக்காடர் நீக்கி, நல்ல பலன்களை அருள்வதாக ஐதீகமாகும்.

    கிரிவலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து முக்தி பெற முடியும் என்பதற்கு அடித்தளம் அமைத்ததே இடைக்காடர்தான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர் இன்னமும் திருவண்ணாமலை தலத்துக்கள் ஒளி சமாதியாக இருந்து அருள்பாலிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.
    இடைக்காடரின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாகப் பெறுகிறார்களோ அவர்களுக்கு திருவண்ணாமலை தலத்துக்கு சென்ற உண்மையான பலன்கள் கிடைக்கும். 
    ×